Vallalar Universal Mission Trust   ramnad......
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம்.
மருளும் துயரும் தவிரும் படிஎன்
மனமன் றிடைநீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
சினன்என் றிகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
விடுமா றருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்
அபயம் அபயம் அபயம் அபயம்.

மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை
மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.