மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான்.
Write a comment