மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே
Write a comment