சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்றறியப்படும்.
சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்;
அதனால் உபகாரசத்தி விளங்கும்;
அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்;
அதனால் உபகாரசத்தி மறையும்;
உபகாரசத்தி மறையவே எல்லாத்தீமைகளுந் தோன்றும்.
ஆகலில் புண்ணியமென்பது சீவகாருணிய மொன்றே என்றும்,
பாவமென்பது சீவகாருணிய மில்லாமை யொன்றே என்றும் அறிய வேண்டும்.
அன்றி, சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும்,
அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும்,
இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகாலறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்ற முத்தர்களென்றும்,
அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்க ளென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
Write a comment