Vallalar Universal Mission Trust   ramnad......
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
 சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம் உரைப் பதுவே.