1978 ?
சுவாமி சரவணானந்தா.
4. தயவு ஆலயம்.
எங்கும் நிறை கடவுள் உண்மையும் நாமாய் உள்ள இயல்பும், நமக்கு அக அனக அனுபவம் தருவதாயுமுள்ளதால் இந்தத் தயைவையே தயவு விளக்காக்கித் தயவுக் கோயிலில் வைத்து வழிபட நேர்கின்றது.
இத் தயவாலயம், தத்துவ நிலை கடந்த நித்திய வாழ்வு முறைக்கு ஏற்ப அமைவது ஆதலின் இங்கு வளர் ஒளியாய்த் திகழும் தீபச் சுடரை திரை மறைப்பில்லாது என்றும் எளீதில் தரிசித்து, உளம் கொண்டு இன்புறலாம்.
சிதம்பர சிவ ஜோதியை அக்கினி திக்கினின்று ஈர்த்து, அருட்பெருஞ் ஜோதியாய் ஆக்கிக்கொண்டு, திரிதேக சித்தி உண்மையை வெளிப்படுத்தினது பரசிவபதி. அது சென்ற நூற்றாண்டில். இதுவே இன்று வெளிப்பட்டு விளங்க இத் திண்டுக்கல்லில் முளைவிட்டு சின்மயபுரத்தில் கோயில் கொண்டு உலகம் எல்லாம் காண ஒளிவீசத் தொடங்குகின்றது.
இந்தத் தயவுச் சுடர்கூட, சிவம் கால்மாறி வாசி நடம் பயில் மதுரையில், திரைமறைவில் ஆடிய திருவிளையாடல் அனுபவத்தைத் திரி தேக சித்தி அனுபவமாக வ்ழங்க எழுந்தருளி நின்றதாம்.
கடவுள் உண்மை கொண்ட சச்சிதானந்த நிலையே, வல்லின, மெல்லின, இடையின மெய்களாய் அமைந்துள்ளனவாம். இவற்றில் சித் விளக்க மெல்லின மெய்ந் நிலை நின்றே அனுபவம் பெற வேண்டியிருத்தலின், மதுரையில் ம், த், ர் எனும் மும்மெய்யும் மறைந்துள்ளனவாம். அப்படி மறைவிலிருந்த மும்மெய்யும் இக்கு இத் திண்டுக்கல்லில் வெளியாகிவிட்டிருப்பதைக் காண்கின்றோம்.இங்கு வெளியான இவ்வுண்மையே சித்விளக்க பீடமான சிம்னயபுரத்தில் தயவுத் தீபமாக வெளிப்பட்டு உலகுக்கு ஒளி வழங்க வந்துள்ளதாம்.
மேற்படி தயவாலயமாம் தயா ஞான சபையைத் தோற்றுவித்து, தயாதீபத்தை ஏற்றி வைத்தது, 15.12.1977 குருவாரம். இது, வியாழன், வெள்ளி, சனி எனும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளால் முப்புரம் மல ஒழிவில் பதி அனுபவம் புறவுலகில் பரவுதல் போன்று மூன்று நாட்களுக்குப் பின் 18.12.1977, ஞாயிறன்று, இந்தத் தயவாயலத் திறப்பு விழாவும் நடந்தேறியது.
அமெரிக்காவில், ஞான தீப வழிபாட்டினையும், கொலை புலை தவிர்க்கும் சன்மார்க்கத்தினையும் பிரபலப்படுத்திப் பரப்பி வரும் நம் நாட்டு திரு சச்சிதானந்த ஆன்ம வடிவில், நமது வள்ளலே வந்து இத் தயவாலயத்தைத் திறந்து வைத்துச் சென்றுள்ளது, புற உலகம் அறியா உண்மையாகும். அகமறியார் உளத்திருந்து சுத்த சன்மார்க்கத்தை வளர்த்து வருகின்றார் நம் வள்ளற் பெருமானே என்பது உண்மையாம்.