Vallalar Universal Mission Trust   ramnad......
முன்தேகம் உண்டென்பது எப்படியென் றறியவேண்டில்:
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி கொலை பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுவது எதனாலென்றறிய வேண்டில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் விட்டுக் கடின அறிவுள்ளவர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால் கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி கொலை பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுகின்றார்களென் றறியவேண்டும்.
- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த ஒரு சமுசாரி அதற்கு முன்னும் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானென்றும், வீடில்லாமல் குடித்தனம் செய்ய மாட்டானென்றும், பின் வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் திரும்ப வேறொரு வீட்டில் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக ஒரு வீடு கட்டிக்கொண்டால் முன்போல் குடிக்கூலி கொடுத்துக் குடிபோவதைத் தவிர்வா னென்றும் அறிவதுபோல; இந்தத் தேகத்தில் ஆகாரக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சீவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக்கூலி கொடுத்துச் சீவித்திருந்தா னென்றும், தேகமில்லாமல் சீவித்திருக்க மாட்டானென்றும், இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னும் வேறொரு தேகத்திற் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருட்டேகத்தைப் பெற்றுக்கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோக மாட்டானென்றும் அறியவேண்டும்.
சிலர் முன்தேகம் எடுத்ததும் பின்தேகம் எடுப்பதும் இல்லை. இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால் தேகியும் அழிந்துவிடுவானென்றும், சிலர் முத்தியடைவா னென்றும், சிலர் பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பா னென்றும், சிலர் தேகம் இல்லாமல் தேகம் அழிந்தவிடத்தி லிருப்பானென்றும் பலவாறு வாதிப்பது எதனாலென்றறியவேண்டில்:- அவரவர்களும் தேகமே ஆன்மாவென்றும் போகமே முத்தியென்றும் கொள்ளப்பட்ட லோகாயத மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப்பட்டவர்க ளாதலால், மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்த முத்தி உண்டென்றும் முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறுவேறு தேகத்தை எடுப்பானென்றும் பிரத்யட்ச அனுமான முதலிய பிராமணங்களால் உண்மையை அறிந்துகொள்ள மாட்டாதவர்க ளென்றும், அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும் இல்லை யென்றும் அறியவேண்டும்.vallalar