அருள்பாவலர் சக்திவேல் .வே
வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி அகவலும்
தைப்பூச ஜோதி தரிசனச் சிறப்புக் கட்டுரை...

தலைப்பு:

வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி அகவலும்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திருஅருட்பாவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் என்றொரு நெடும்பாடல் உண்டு. அருட்பாவில் உள்ள 5818 பாடல்களுள், அருட்பெருஞ்ஜோதி அகவல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது .

அதுமட்டுமின்றி வள்ளலார் ஏற்படுத்திய சன்மார்க்க சங்க வழிபாட்டில் ; இன்றளவிலும் அகவலைப் பாராயணம் செய்தல் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இவ் அகவல் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல்1596 அடிகளைக் கொண்டது. இது நேரிசை ஆசிரியப்பாவல் இயற்றப்பட்டுள்ளது.. திருஅருட்பா எனும் ஞானக் களஞ்சியத்தின் மணிமகுடமாக அகவல் விளங்குகின்றது..

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியர் , ஆசிரியப்பாவின் அதிகபட்ச அளவு ஆயிரம் அடி என்பார்.
ஆனால்; அந்த தொல்காப்பிய அடி வரையறையும் கடந்து 1596 அடிகளுடன் அருட்பெருஞ்ஜோதி அகவல் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நெடும்பாடல் ஆன்மிக உண்மைகளை ஒளிவு மறைவின்றி
வெளிப்படையாக விளக்குகின்றது.

வள்ளல் பெருமானார் ; தாம் பெற்ற இறை அனுபவத்தையெல்லாம் இவ் அகவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி , ஆன்மீக - உள்ளார்ந்த இறை அனுபவத்தைப் பெறுவதற்கான உந்து சக்தியாவும் அகவல் திகழ்கின்றது என்று சன்மார்க்க சாதுக்கள் நம்புகின்றனர்.

சமயம் கடந்த உள்ளார்ந்த ஆன்மிக அனுபவத்தைப் பெற நினைப்பவர்கள் அகவல் பற்றித் தெரிந்துகொள்வதும் ; அகவலை வாசிப்பதும் மிக முக்கியமானதாகும்.

அகவல் எழுதப்பட்ட காலம் :
~~~~~~~~~~~~~~~~~~~~
வள்ளல் பெருமானார் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தங்கியிருந்த காலக்கட்டத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதினார்கள்.

வள்ளல் பெருமானார் 1865- இல் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றிவைத்ததற்குப் பின் ;

1867-இல் அணையா அடுப்போடு அன்னமிடும் சத்திய தர்மச்சாலையைத் தோற்றிவைத்தற்குப் பின் ;

1870-இல் சத்திய ஞான சபையைத் தோற்றிவைத்து ஜோதி தரிசனத்தை நிகழ்த்தியதற்குப் பின்தான் ... ;

அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளல் பெருமானார் இயற்றினார்கள் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

சுவாமி சரவணாந்தா எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூலின் அணிந்துரையில் - சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள் கூறும் கருத்து இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

" வள்ளல் பெருமானால் அருளப்பெற்ற திருவருட்பாவின் மணிமுடியாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்கு அவரே தலைப்பிட்டுள்ளார். 1872-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் நாள் இதனை அருளியுள்ளார்."

அகவல் தரும் தகவல்கள் :
----------------------------------------------

வள்ளல் பெருமானார் ஒன்பது வயதளவிலிருந்து அருட்பாக்களை எழுதத்தொடங்கினார்கள். பன்னிரண்டு வயதளவிலிருந்து ஞான வாழ்வைத் தொடங்கினார்கள். இடைவிடாத ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார்கள்...

வள்ளல் பெருமானாரின் மெய்ஞ்ஞானத் தேடலின் முயற்சியால் பெருமானாரின் 49-ஆம் வயதில் மலர்ந்ததுதான் அருட்பெருஞ்ஜோதி அகவல்.

ஆதலால் ; அகவல் சன்மார்க்க - மெய்ஞ்ஞானத்தின் உச்சமாக விளங்குகின்றது .

இவ் அகவல் அமிழ்தில்... ஒருசில துளிகளைச் சுவைத்துப் பார்ப்போமே..!

"என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து
என்னுள்ளே விரிந்த என்னுடை அன்பே

என்னுள்ளே விளங்கி என்னுள்ளே பழுத்து
என்னுள்ளே கனிந்த என்னுடை அன்பே"

என்று வள்ளல்பெருமனார் அகவலின் 1480-ஆம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வரிகளின் மூலம் ....

வள்ளல் பெருமானாரின் அக அனுபவமே... இறையாற்றலே... அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்..

அகவலில் 1555-ஆம் வரியில்..

"சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து
எனக்கே அபயம் அளித்தோர் அருட்பெருஞ்ஜோதி"

என்று வள்ளல் பெருமனார் பாடியுள்ளார்கள்.

இதன்மூலம் ,' தன்னுள் விளங்கிய இறை அனுபவத்தையே , வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்துக் காட்சிபடுத்தினார்கள் ' என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

"சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறை அமுது உண்டனன்.."

என்ற திருஅருட்பா ஆறாம் திருமுறையின் பாடல் (2173) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

" பிண்டமும் அதிலுறு பிண்டமும் , அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே ! "

எனும் அகவலின் (1294 ) வரிகள்...

நம்... மனித உடலுள் ... இறைப்பண்டம் பொதிந்துள்ளது என்பதை அழகாக விளக்குகின்றது.

" உள்ளகத்து அமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே..!"

எனும் அகவலின் (1020) வரிகள் ..

பெருமாரின் உள் அகத்துள் இறையாற்றலானது.. கலந்து ... அருள் செய்தமையை விளக்குகின்றது.

" இயற்கை உண்மையதாய் , இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ... "

எனும் அகவலின் (70) வரிகள் ...

ஒவ்வொரு மனித தேகத்தினுள்ளும் இயற்கையாகவே அருட்பெருஞ்ஜோதியானது அமைந்துள்ளது என்பதையும் ; அவ் இயற்கை உண்மையைப் புரிந்துகொண்டு... அப்பேரொளியைக் தன்னுள் காண்பதே இயற்கையான பேரின்பம் என்பதையும் விளக்குகின்றது.

வடலூர் சத்திய ஞான சபையின் தொடக்க விழா பத்திரிக்கையில்...
"இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞான சபைக்கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்திய திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்திய திரு நடம் செய்தருள்கின்ற ....."

என்று பெருமானார் குறிப்பிட்டுயிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இயற்கை உண்மையான; இயற்கை இன்பமான அருட்பேரொளியானது நம் உடம்பில் சிற்சபையில் - புருவமத்தியில் விளங்குகின்றது என்ற மெய்ம்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சிற்சபை எங்குள்ளது...?
~~~~~~~~~~~~~~~~

" சிற்சபை " என்பதற்கும் ; அருட்பெருஞ்ஜோதி என்பதற்கும் வள்ளல் பெருமானார் கூறும் கருத்தை .... பெருமானாரின் வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு சற்று சிந்திப்போமே....!

"இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."

என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளல் பெருமானார் குறிப்பிட்டுள்ளார்கள்.

இக் குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?

★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.

★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் பெரிய ஜோதியாக விளங்குகின்றது.

★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இப் பெருஞ்ஜோதி விளங்குகின்றது.

★அது பொன்மையும் வெண்மையும் கலந்த பேரொளியாத் திகழ்கின்றது.

★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.

ஆம்...

இவ் அருட்பேரொளி இறைக் கொள்கையின் உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையைப் பெருமானார் அமைத்தார்கள் ; தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்.

அப்பேரொளியை... அவ் அருட்பெருஞ்ஜோதி பற்றிய மெய்ம்மைகளைத்தான் அகவலில் எழுதிவைத்தார்கள்.

பெருமானார் பெற்ற பெரும் பேறு..:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோடி சூரியப் பிரகாச , அருட்பெருஞ்ஜோதியைத் தன்னுள் கண்ட பெருமானார் பெற்ற பெரும் பேற்றைப் பற்றி ... பெருமானார் கூறும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிந்திப்போமே..!

"மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை"

என்று வள்ளல் பெருமனார் அகவலில் (1582) குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் , இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் பெறாத மாபெரும் இறையாற்றலைப் பெருமனார் பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.

"...அருட் பேரொளியால் இன்பையும் நிறைவித்து

என்னையும் நி(உ)ன்னையும் ஓர் உரு(வம்)ஆக்கியான்"

எனும் அகவல் (1572) வரியாலும் ;

" தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே...! "

எனும் அகவல் (1146) வரிகளால் வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒரே உருவமாகியதை புரிந்துகொள்ளமுடிகின்றது.

"உலகு உயிர்த் திரள் எல்லாம் , ஒளிநெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை..! போற்றி நின் பேரருள்...! "

எனும் அகவல் (1578) வரியால் ;

படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் ... எனும் ஐந்தொழில் செய்யும் பேராற்றலை வள்ளல் பெருமானார் பெற்றமையை அறியமுடிகின்றது .

அதுமட்டுமின்றி அனைவரும் மெய்ஞ்ஞான ஒளிநெறியைக் கடைபிடித்துப் பேரின்ப பெருவாழ்வு வாழ ... வழிகாட்டும் ஞானகுருவாகவும் பெருமானார் விளங்கும் தன்மையை உணர முடிகின்றது.

ஒளிநெறிக்கா(ண)ன வழிமுறை... :
--------------------------------------------------

நம்முள் - அக அனுபவமாக விளங்கும் - ஆன்ம பேரொளியைத் தரிசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.. ?

வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு... சற்றே சிந்திப்போமே...!

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளியில் ... முதன்முதலாகச் சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து நிகழ்த்திய பேருபதேசத்தின் தொடக்கப் பகுதியை நோக்குவது சிறப்பாக அமையும் .

."....யோகிகள் வனம் , மலை , முழை முதலியவற்றிற்குப் போய் நூறு - ஆயிரம் முதலிய வருட காலம் தவஞ் செய்து சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.

இப்படி தவம் செய்து உஷ்ணத்தைஉண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும் ,

தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் , இதை விடக் கோடிப் பங்கு , பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

எவ்வாறெனில் ; ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் , நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்... ......"

என்று வள்ளல் பெருமனார் பேருபதேசத்தில் (பக்கம் 464) கூறியுள்ளார்கள்.

இக் குறிப்பினால் நாம் புரிந்துகொள்வது என்ன...?

★நாம் தினசரி ஒரு ஜாம நேரம் (சுமார் இரண்டு மணி நேரம்) இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

★இறை சிந்தனையுடன் கவனமாக இருந்தால் அல்லது அருட்பாக்களை பாராயணம் செய்து கொண்டிருந்தால் ; சுத்த உஷ்ணத்தை நம்முள் நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ... எனும் ஆன்மிக உண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.

இறை அனுபவத்தின் உச்சத்தில் இவ் அகவல் எழுதப்பட்டதால் ; இவ் அகவலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையதாக சன்மார்க்க அன்பர்கள் நம்புகின்றனர்.

ஆதலால், இவ் அகவலைத் தினசரி வாசித்தால் ; காடு- மலைகளுக்குச் சென்று தவமிருந்து சித்தர்கள் பெற்ற பெரும் தவப் பேற்றை - சுத்த ஞான உஷ்ணத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று சன்மார்க்கிகள் நம்புகின்றனர்.

இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலை கூட்டுப் பாராயணமாகச் செய்த பின்பே ; எந்தவொரு சன்மார்க்க விழாவையும் தொடங்குவது சன்மார்க்கர்களின் வழக்கமாக உள்ளது.

வள்ளல்பெருமனார் காட்டிய சன்மார்க்க வழியில் நடக்கும் பல அன்பர்கள் தினசரி காலை நேரத்தில் இவ் அகவலைப் பாராயணம் செய்து வருகின்றனர்.

"தோத்திரம் புகல்தல்" சன்மார்க்கத்தின் ஞான வழிமுறையாகக் கருதப்படுகின்றது.

"..... ஞானம் தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்

சிற்குண வரைமிசை உதயம் செய்தது மாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த

நற்குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்கின்றார்...."

என்று திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பெருமானார் பாடியுள்ளமை ; இவ்விடத்தில் நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்... நம்முள்... மாயைத் தொலைந்து , பொன்னொளி தோன்றி , சித்திகள் எல்லாம் கைக்கூட வேண்டுமானால் தோத்திரம் பாடுதல் வேண்டும் என்ற பெருமாரின் கருத்தை மேற்கண்ட அருட்பா வரிகளால் புரிந்துகொள்ளலாம்.

மாயத் திரைகள் அகல.... வழி...:
---------------------------------------------

" கோடி சூரியப் பிரகாசமுடைய.. ... ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....." என்று பெருமானார் கூறியுள்ள கருத்துத் தொடர்பாக.... பெருமான் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திப்போமே....!

" தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி...!

எனும் அகவல் (834) வரிகளின் மூலம்...

உலகமெலாம் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைகொண்டே , அவரின் அருளாலே நம்முள் மறைத்திருக்கும் மாயைத் திரைகளை நீக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

" எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி...! "

எனும் அகவல் (838) வரிகளின் மூலம் ,

சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆணவம் , கன்மம் , மாயை , பொறாமை , காமம் , மாச்சரியம் , உலகச்சாரம் முதலிய தடைகளைக் கடந்தால் ; நம்முள் பேரொளியைத் தரிசிக்க முடியும் என்பதை அறிய முடிகின்றது.

வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூசச் ஜோதி தரிசனத்தின் பொழுது ஏழு திரைகளை நீக்கியப் பின் பேரொளி தரிசனம் காண்பிப்பதை இங்கு நினைவுகொள்ளத்தக்கது

" பவக் கடல் கடந்து நான் பார்த்த போது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே...!"

எனும் அகவல் (1392) வரிகளின் மூலம் ,

காமம் , களவு , கொலை முதலிய பாவச் செயல்கள் செய்வதைத் தவிர்த்தால் (பாவம் எனும் பெருங் கடலைக் கடந்தால் ) அருளெனும் கரையைக் கண்டு மகிழலாம் என்பதை அறிய முடிகின்றது.

மேலும் ...

"சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும் ,

கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.

மரணம் , பிணி , மூப்பு , பயம் , துன்பம்.... இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவ லாதிகார மரணம் நீங்கும்..."

எனும் வள்ளல் பெருமனாரின் உபதேசக் குறிப்பும் (பக்கம் : 411 - 412) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மேற்கண்ட பெருமானாரின் உபதேசக் குறிப்பினால்...

... உயிருள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைக் காண தடைகளாக இருப்பனவற்றை பற்றி புரிந்துகொள்ளலாம்.

உயிர் ஒளியைக் காண தகுதி :
-------------------------------------------

"உயிருள் யாம் ; எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே...! "

எனும் அகவல் (974) வரிகளால்...

இறையாற்றலானது நம் உயிருள் பொதிந்துள்ளது என்பதை அறியலாம்.

" உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுக! எனச் செப்பிய சிவமே...! "

எனும் அகவல் (970 ) வரிகளின் மூலம்...

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் வேறுபாடு இன்றி பொதுவாக நோக்கவேண்டும் என்பதை அறியலாம்..

"எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உவக்கின்றார் யாவர் அவர் உளம் தாம் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் எனத் தெளிந்தேன்.. "

எனும் அருட்பா வரிகளும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எவ்வித வேறுபாடும் பார்க்காது... அவற்றைத் தம் உயிரைப் போல் எண்ணி மகிழ்கின்றார்களோ.... அவர்களின் உள்ளமே இறைவன் தங்கியிருக்கும் இடமாகும்..

"எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.. ! "

எனும் அகவல் (962 )வரிகளால்..

இரக்க குணம் , கருணை உள்ளம் இயற்கையாகவே உள்ளவர்களிடத்தே இறையாற்றல் நிரம்பியுள்ளது என்பதை அறியலாம்.

" உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக ... நீ அடைந்து விலக்குக மகிழ்க...! "

எனும் அகவல் (1590 ) வரிகளால்....

உலகில் வாழும் உயிரினங்கள் அடையும் துன்பத்தை நீக்குபவர்களே பேரின்ப பெருவாழ்வில் வாழ முடியும் என்பதை அறியலாம்.

"நமக்கு முன் சாதனம் கருணை...." என்று பெருமானார் பேருபதேசத்தில் குறிப்பிட்டுயிருப்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

வள்ளல் பெருமானார் வடலூர் பெருவெளியில் சத்திய ஞான சபையை அமைப்பதற்குச் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பசித்துயர் துயர் நீக்கும் அணையா அடுப்போடு விளங்கும் சத்திய தர்மச்சாலையை அமைத்தமையை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

நம்முள் விளங்கும் சத்திய ஞான சபையைக் காண முதல் தகுதி... உலக உயிரினத்தின் துன்பத்தை நீக்கும் கருணை உள்ளமே ஆகும்....

உள்ளொளியைக் கண்டால்....:
--------------------------------------------

சிற்சபை நடுவே திருநடம் புரிகின்ற , உள்ளொளி அற்புதத்தை நாம் கண்டுவிட்டால் என்ன... என்ன நிகழும்... வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளின் அடிப்படையிலே சற்றுச் சிந்திப்போமே...!

" உடல் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே...! "

எனும் அகவல் (1322) வரிகளால் ..

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்... நம் உடலைப் பற்றியிருக்கும் அனைத்து உடல் நோய்களும் , உயிர்ப்பிணிகளும் நீங்கிவிடும் என்பதை அறியமுடிகின்றது.

" என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து , உளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே...! "

எனும் அகவல் வரிகளால்...

நம்முள் அருள்பேரொளியைக் கண்டுவிட்டால் , அனைத்து துயரங்களும் சோகங்களும் நீங்கி , மனமானது நிம்மதியாய் நல்ல நிலையில் நிலைத்திருக்கும் என்பதை அறியமுடிகின்றது.

"தாழ்வெல்லாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த வளரொளி மணியே...!"

எனும் அகவல் (1308) வரிகளால்...

உள்ளொளியை நாம் கண்டுவிட்டால் அனைத்து இழிவுகளும் நீங்கி , மரணமிலா பெருவாழ்வில் வாழலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

" அண்ட கோடிகள் எல்லாம் அரைக் கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே...! "

எனும் அகவல் (1302) வரிகளால் ...

சித்திக்கு மூலமாக விளங்கும் அருள்பேரொளியை நம்முள் கண்டுவிட்டால்... இவ் அண்ட உண்மைகளை எல்லாம் அரை நொடியில் அறிந்துகொள்ளலாம்... என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.

" இரு நிதி எழு நிதி இயல் நவ நிதி முதல் திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே...! "

எனும் அகவல் (1374 ) வரிகளால் ...

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்.. இப் பிறவியின் மண்ணுலக வாழ்விற்கான நிதியையும் , மறுபிறப்பிற்கான நிதியையும் , விண்ணுலக வாழ்விற்கான நிதியையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியமுடிகின்றது.

ஆம்...

★ சமரச சத்தியச் சபையில் நடம் புரிகின்ற , சமரச சத்தியச் தற்சுயம் சுடரை .... நம்முள் காண்போம்...!

★ வேதமும் ஆகம விரிவும் பரம்பரநாதமும் கடந்த ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

★ உள்ளொளி ஓங்கிட... உயிரொளி விளங்கிட... வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலை நம்முள் காண்போம்...!

★ எண்ணிய எண்ணிய எல்லாம் தருகின்ற , நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

★சித்திகள் அனைத்தையும் தெளிவாகப் பெற்று , சத்திய நிலைதனைப் பெறுவோம். ...!

★எங்குமாய் விளங்கும் அருள்பேரொளியை... உள்ளங்கை நெல்லிக்கனி போன்று ... நம் அக அனுபவத்தால் கண்டு தரிசிப்போம்....!

நிறைவுரை :
--------------------
வடலூர் சத்திய தர்மச்சாலையின் மைய மண்டபத்தில் , வள்ளல் பெருமானார் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் நோட்டுப் புத்தகம் கண்ணாடிப் பேழையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

அவ் அகவல் நோட்டுப் புத்தகத்தைப் பலரும் பயபக்தியுடன் கைக் கூப்பி வழிபட்டு வருகின்றனர்..

அகவலை வழிபடுபடுவதோடு விட்டுவிடாமல் , அகவல் காட்டும் ஞான வழியில் வாழ முயற்சிப்பதே வள்ளப்பெருமானார்க்கு காட்டும் உண்மையான மரியாதை ஆகும்

"வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ,

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் ,

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே!"

என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப தினசரி நாமும் அகவலை வாசிப்போம்.

அருள் அகவலை வாசிக்க வாசிக்க.... அதனுள் அமைந்த மந்திர ஆற்றலானது நம்மை வசீகரித்து உயர்த்துவதை அனுபவத்தில் உணர்வோம்...!

தினசரி அகவலை வாசிப்போம்...!
ஞானத் தகவலைப் பெறுவோம்..!

(கருத்துப் பதிவு : அருள்பாவலர் சக்திவேல்

வெளியீடு : www. vallalarghananeri.com)

இதுபோன்ற .....
வள்ளல் பெருமானார் - திருஅருட்பா - சன்மார்க்கம் தொடர்பான கட்டுரைகளை வாசிக்க வேண்டுமா...?

www.vallalarghananeri.com

எனும் இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்..!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழி...! வாழி...!

2 Comments
ஸ்வாமி  இராஜேந்திரன்
மக்களின் ஞானக் கண்களை திறக்க தாங்கள் செய்து வரும் முயற்சிகள் வாழக!
Friday, January 18, 2019 at 10:01 am by ஸ்வாமி இராஜேந்திரன்
SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே
🙏🙏🙏

தயவான நன்றிகள் ஐயா...

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வள்ளல் மலரடி வாழி.! வாழி!
Sunday, January 20, 2019 at 10:06 am by SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே