Elavarasan Annamalai
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

 

பசித்திரு தனித்திரு விழித்திரு

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !

இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம் நமது வடலூர் வள்ளலார் இயற்றிய அகவலை பொருளுணர்ந்து படித்தால் நமது வாழ்க்கையில் நல்லதொரு தகவலை பெற்றுக்கொள்ளலாம் ஆகையால் கீழே ஒருசில அகவலுக்கு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது

எறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே
ஆறுஆறு காட்டிய அருட்பெருஞ்சோதி

ஒரு ஜீவன் ஏறமுடியாத மலைமீது உள்ள மலைத்தேனைப்போல பார்த்து இவை நம் கையில் கிடைக்குமா என்று ஏங்கித்தவிக்கும் வேளையில் ஏணியை ஒருவர் கொண்டுவந்து உதவினால் எவ்வாறு இருக்குமோ அதைப்போல மனிதன் கண்களுக்கு புலப்படாத இறை இன்ப அருள்ஞான அனுபவ நிலைகளில் ஏறச்செய்து ,இப்பிரபஞ்ச உயிர்கள் வீடுபேறு அடைவதற்க்கு ஏதுவான வழிகளான ஆறு தத்துவார்த்தங்களையும் ஏணிப்படிகளாகக் கொண்டு இறை இன்ப அருள்ஞான வழியை அடைய எனக்கு பெருங்கருணை செய்தருளிய அருட்பெருஞ்சோதி .

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்சோதி .

எனது அறிவினில் ஏற்படும் தெளிவின்மை முரண்பட்ட மாறுபாடுகளை நீக்கி அருள் ஞானம் கொடுத்து எனது உடம்பினுள் ஏற்படும் வாத,பித்த,கபம் ஆகியவற்றால் உண்டாகும் நோய்களை நீக்கி அருளைக்கொடுத்து அருளியது நமது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெணஇவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்சோதி

இந்த ஜீவான்மாவும் பரமாத்வாவும் கலப்பால் ஒன்றாகவும், பொருள் தன்மையினால் இரண்டாகவும் பொதுவாய்ப் புணர்ந்து ஒன்றிரண்டாகவும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவரே

ஓதாது உணர்ந்திட ஒளிஅளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி

இந்த பிரபஞ்ச நூல்களை பயிலாமலே பொருள் உண்மைகளை உணர்ந்து தெளிந்த நீரோடையை போல என்மனதை தூய்மை படுத்தி திருவருள் ஞானத்தை அறிய அடிப்படையாக விளங்குவது அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

ஒளவியம் ஆதிஓர் ஆறும் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி

அகப் பகைகளான விருப்பு வெறுப்பு பேரவா மயக்கம் செருக்கு பொறாமை ஆகிய ஆறினையும் நீக்கிய ஆன்மாக்களுக்கு இறைத்தன்மையின் நல்ல பண்புகளை வெளிப்படுத்துவது நமது அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்சோதி

நிலையான முக்தி பேற்றை அருளக்கூடிய ஒப்பற்ற பெருவெளியாய் இருக்கும் சிவவெளி என்னும் ஒப்புயர்வு இல்லாத ஒளிமயமான ஓர் அருள்வெளியை தம்முடைய இடமாகக்கொண்டு விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவரே

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்சோதி

பூரண உண்மை ஞான நெறியினால் விளங்கக்கூடிய எந்த காலத்திலும் நீர்,நெருப்பு,காற்று,போன்ற எதனாலும் அழியாத பேரின்பம் அருளக்கூடிய ஒப்பு உயர்வு இல்லாத ஆன்மாவில் (அதாவது சிற்றம்பலத்தில் விளங்கி அருளுவதுதான் அருட்பெருஞ்சோதி

சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனும்
அத்து விதச்சபை அருட்பெருஞ்சோதி

தூய உள்ளத்தின் மெய்ப்பொருளாய் உயர்வு அடையும் சிவயோக ஞான நெறிதோன்றி உயிருள்ள ஆன்மாவாகிய ஜீவாத்மாவும்,பரம்பொருளாகிய சிவமும் இரண்டறக் கலந்து,சிவபோக இன்பத்தை தருவதுதான் அம்பலத்தில் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

தூய கலாந்த சுகம்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ்சோதி

தும்பை மலர் போன்ற தூய்மையான இறைவனை அடைவதற்க்கு உதவும் மேன்மைமிக்க கலைகள் உணர்த்துவதன் மூலம் பேரின்பம் அருளக்கூடிய ஞான வெளியில் நடுநாயகமாய் விளங்கி அருள்வது தான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

எனவே அன்பர்களே நாமும் நம்வாழ்க்கையில் தினமும் அதிகாலைப்பொழுதில் நித்திரை நீங்கி எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து நீராடி விபூதி தரித்துக்கொண்டு திருவிளக்கின் முன்னாள் அமர்ந்து தூயசிந்தனையோடு ஓதியுணர்வோமானால் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஏறாநிலையில் ஏற்றிவைப்பார்,மற்றும் தயவு உள்ளத்தோடு பசி என்று யார்வந்தாலும் அவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசியை போக்கி இறைசிந்தனையோடு வாழ்ந்து வருவோமானால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்படுவார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.

பசித்தவனுக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மோட்ஷவீட்டீன் திறவுகோல் !

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்,
அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெம்பர் 34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600117
கைபேசி;8428291559

image.png

image.png