தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
சட்சமயங்களொடு சண்மதங்களும் சடாந்தத்தில் கலந்திடவே
கட்சிதமாய் அச்சடாந்தத்தையும் தனக்குப் பூர்வமாக்கித்தான்
மாட்சிமையொடு உத்திரம் நின்றுமருவும் குருதுரியசமரசத்தையும்
ஆட்சிசெய்யும் சுத்தசிவதுரியாதீத முடிஅனுபவமே சுத்தசமரசம். 1
ஆதிச்சட்சமயமத சன்மார்க்கம் சீவசபையனுபவம் அறிந்திடுக
அதீதச் சடாந்தசன்மார்க்கமோ சிற்சபையனுபவம் புரிந்திடுக
அதீதாதீதச் சமரசசன்மார்க்கம் பொற்சபையனுபவம் தெளிந்திடுக
அந்தாதீதச் சுத்தசன்மார்க்கமோ சுத்தஞானசபையனுபவம் அருளே. 2
ஆகவே அறிகவே ஆதிச்சட்சமய சன்மார்க்கத்திற்கு
அதீதம் சகத்தில் சண்மதசன்மார்க்கம் என்றேஇதற்கு
அதீதம் சடாந்தசன்மார்க்கமே அறிந்திடுக அதற்கும்
அதீதம் சமரசசன்மார்க்கம் முடிவோ சுத்தசன்மார்க்கமே. 3
சுத்த சன்மார்க்கம் என்னும் பெயரில் இச்சகத்தெங்கும்
மத்த மன்மார்க்கமே இன்னும் மலிந்துபோய் நிலவுகிறது
மெத்த நன்மார்க்கம் இதுதான் எனக்கண்டார்கள் சிலரும்
பித்த துன்மார்க்கர்போலவே பீத்திமடிவது பெருமாயையே! 4
நித்தமும் அன்னதானம் நிகழ்த்துதல் நல்லதேயெனினும்
புத்தமுத சத்துவிசாரம் புகலுதலும் போற்றலேயெனினும்
எத்தனையோ காலங்கள் இவ்விரண்டையும் இயற்றினாலும்
அத்தனையும் கானற்சலமே அகத்தகக்கணல் காணார்க்கு. 5
அகத்தின் அகக்கணல் அடைந்திடத் தடையெதுவெனில்
அகத்தின் அகத்தில் காமகோப லோபமோகமுடன்வன்
மதத்தின் குதர்ப்பமும் வீண்மாச்சரிய விகர்ப்பமும்அருட்
பதத்தின் சீர்மிகுவரம்கெடு படுகொலை உணர்வுமேஆம். 6
நூலனைத்தும் சாலமென்று அறியார்க்கு அருட்பிரகாசர்
மேலானஅருட்பாவும் சாலமே ஆர்ந்துபார்க்கார் அறியார்
வாலொன்று தம்முள்உள்ளதை முயன்றடைய முனையாது
சாலநூலுக்கும் நூற்கள் பற்பலவாய்நூற்றே நொடிந்தாரே. 7
உரைமனம் கடந்த ஓருபெருந் திருவருள்வெளிமேல்
அரைசுசெய்து ஓங்கும் அருட்பெரும்பதியே மெய்த்
துணையென்று கண்டு தூயவிளக்கம் கொள்ளாதார்
முனைவரென்றே பட்டம்பல பெற்றாலும் படுமூடரே. 8
ஞானசரியைப் பயனாவது இந்திரியநிக்ரகச் சற்செய்கையேயாம்
ஞானகிரியைஎனும் கரணஒழுக்கத்தால் சுத்தமனம் நல்ஏவலாகும்
ஞானயோகப் பெரும்பயனாம் நிராசையை சத்துவிசாரம்தந்திடும்
ஞானத்தில்ஞானமது நற்சாந்த நிறைவான சுத்தஆன்மஅறிவேயாம். 9
எல்லாம்வல்ல அருளுடைய தனிப்பெரும் பதியே
எல்லாவன்மமும் இருளும் மருளுமுடைய எங்கள்
பொல்லாமனக் கருங்கல்லைக் கரைவித்து பொதுவில்
நல்லோர்நாடும் நடுநிலை நல்வாழ்வை நல்குகவே! 10
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
நேயமுடன்,
அன்பன் துரை சாத்தணன்