www.vallalarspace.com/durai
நல்லோர்நாடும் நடுநிலை நல்வாழ்வை நல்குகவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

சட்சமயங்களொடு சண்மதங்களும் சடாந்தத்தில் கலந்திடவே
கட்சிதமாய் அச்சடாந்தத்தையும் தனக்குப் பூர்வமாக்கித்தான்
மாட்சிமையொடு உத்திரம் நின்றுமருவும் குருதுரியசமரசத்தையும்
ஆட்சிசெய்யும் சுத்தசிவதுரியாதீத முடிஅனுபவமே சுத்தசமரசம்.    1

ஆதிச்சட்சமயமத சன்மார்க்கம் சீவசபையனுபவம் அறிந்திடுக
அதீதச் சடாந்தசன்மார்க்கமோ சிற்சபையனுபவம் புரிந்திடுக
அதீதாதீதச் சமரசசன்மார்க்கம் பொற்சபையனுபவம் தெளிந்திடுக
அந்தாதீதச் சுத்தசன்மார்க்கமோ சுத்தஞானசபையனுபவம் அருளே.    2

ஆகவே அறிகவே ஆதிச்சட்சமய சன்மார்க்கத்திற்கு
அதீதம் சகத்தில் சண்மதசன்மார்க்கம் என்றேஇதற்கு
அதீதம் சடாந்தசன்மார்க்கமே அறிந்திடுக அதற்கும்
அதீதம் சமரசசன்மார்க்கம் முடிவோ சுத்தசன்மார்க்கமே.    3

சுத்த சன்மார்க்கம் என்னும் பெயரில் இச்சகத்தெங்கும்
மத்த மன்மார்க்கமே இன்னும் மலிந்துபோய் நிலவுகிறது
மெத்த நன்மார்க்கம் இதுதான் எனக்கண்டார்கள் சிலரும்
பித்த துன்மார்க்கர்போலவே பீத்திமடிவது பெருமாயையே!    4

நித்தமும் அன்னதானம் நிகழ்த்துதல் நல்லதேயெனினும்
புத்தமுத சத்துவிசாரம் புகலுதலும் போற்றலேயெனினும்
எத்தனையோ காலங்கள் இவ்விரண்டையும் இயற்றினாலும்
அத்தனையும் கானற்சலமே அகத்தகக்கணல் காணார்க்கு.    5

அகத்தின் அகக்கணல் அடைந்திடத் தடையெதுவெனில்    
அகத்தின் அகத்தில் காமகோப லோபமோகமுடன்வன்
மதத்தின் குதர்ப்பமும் வீண்மாச்சரிய விகர்ப்பமும்அருட்
பதத்தின் சீர்மிகுவரம்கெடு படுகொலை உணர்வுமேஆம்.    6

நூலனைத்தும் சாலமென்று அறியார்க்கு அருட்பிரகாசர்
மேலானஅருட்பாவும் சாலமே ஆர்ந்துபார்க்கார் அறியார்
வாலொன்று தம்முள்உள்ளதை முயன்றடைய முனையாது
சாலநூலுக்கும் நூற்கள் பற்பலவாய்நூற்றே நொடிந்தாரே.    7

உரைமனம் கடந்த ஓருபெருந் திருவருள்வெளிமேல்
அரைசுசெய்து ஓங்கும் அருட்பெரும்பதியே மெய்த்
துணையென்று கண்டு தூயவிளக்கம் கொள்ளாதார்
முனைவரென்றே பட்டம்பல பெற்றாலும் படுமூடரே.    8

ஞானசரியைப் பயனாவது இந்திரியநிக்ரகச் சற்செய்கையேயாம்
ஞானகிரியைஎனும் கரணஒழுக்கத்தால் சுத்தமனம் நல்ஏவலாகும்
ஞானயோகப் பெரும்பயனாம் நிராசையை சத்துவிசாரம்தந்திடும்
ஞானத்தில்ஞானமது நற்சாந்த நிறைவான சுத்தஆன்மஅறிவேயாம்
.    9

எல்லாம்வல்ல அருளுடைய தனிப்பெரும் பதியே
எல்லாவன்மமும் இருளும் மருளுமுடைய எங்கள்
பொல்லாமனக் கருங்கல்லைக் கரைவித்து பொதுவில்
நல்லோர்நாடும் நடுநிலை நல்வாழ்வை நல்குகவே!    10

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
அன்பன் துரை சாத்தணன்